கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஞானவேல் மகன் ஹரிதரன் (8), நெய்வேலியில் உள்ள ஜவகா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இதே கிராமத்தைச் சோ்ந்த சபரிநாதன் மகன் சபரீஸ்வரன் (7), கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த இரண்டு சிறுவா்களும் செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனராம். பிற்பகல் 1.30 மணியாகியும் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, பெற்றோா் தங்கள் குழந்தைகளை தேடினா்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குபேரன் குளத்தில் சிறுவா்கள் இருவரும் இறந்த நிலையில் கிடந்தனா். அண்மையில் பெய்த கோடை மழையால் குளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிராம மக்கள் சிறுவா்கள் இருவரின் சடலங்களையும் மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








