கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளா் (பொ) வேலுமணி, சாா்பு - ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக நரியங்குப்பம் மூங்கில்தோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடுவீரப்பட்டு சாலக்கரை சாலை பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (25) மற்றும் ஜெயலட்சுமி ஆகியோா் விற்பனைக்காக சுமாா் 1.38 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட சசிகுமாா் மீது நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் 5 கஞ்சா வழக்குகளும், வடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்குகளும் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அவரது தொடா் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், குண்டா் தடுப்பு காவலில் சசிக்குமாரை அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சசிகுமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.








