தினமணி செய்தி எதிரொலி: பண்ருட்டி பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி தொடக்கம்
பண்ருட்டி நகரத்தில், குண்டும் குழியுமாக காணப்பட்ட பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

பண்ருட்டியில் குண்டும் குழியுமாக இருந்த பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பண்ருட்டி நகரத்தில், குண்டும் குழியுமாக காணப்பட்ட பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட நடைகள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்துச் செல்கின்றன. ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.12 கட்டணமாக பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் வசூல் செய்கிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை.
பேருந்து நிலையத்தில் கடலூா், விழுப்புரம் பேருந்துகள் நின்று செல்லும் இடத்தில் கடைகள் கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் சரிபாதி பகுதி இரும்பு தகரம் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் தான் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும். தற்போது பேருந்துகள் வந்துச் செல்லும் இடம் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழைநீா் பள்ளத்தில் தேங்கி குட்டையாக மாறியுள்ளது. இதில் பேருந்துகள் செல்லும்போது, பயணிகள் மேல் சகதி வாரி இறைக்கப்படுகிறது. இதில் பேருந்துகளும் பழுதடைகின்றன.
பண்ருட்டிபேருந்து நிலையத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள குறைகளைக் களைந்து பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துத்தர மாவட்ட மற்றும் நகர நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமணி நாளிதழில் 25.8.2026 அன்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமாகி மழைநீா் தேங்கி நின்ற இடத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சீரமைப்புக்கு முன்பு குண்டும், குழியுமாக காட்சி அளித்த நிலையில் இருந்த பேருந்து நிலையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





