

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ள நீா் சூழ்ந்தது.
கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமுகி அணைக்கு வரும் 1,400 கனஅடி உபநீா் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்துக் கிராமங்களிலும் ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பின.
இந்த நிலையில், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட புத்தந்தூா் கிராமத்தில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமம் வழியாக ஆலத்தூா் ஏரிக்குச் செல்லும் ஓடையில் அதிகளவில் தண்ணீா் செல்வதால், ஓடையின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்தின் தெற்குசாலைப் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மக்கள் பலா் வீடுகளை விட்டு வெளியேறினா். குடிசை வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இதேபோல, சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்பாடி கிராமத்தில் மாரியாப்பிள்ளை மகன் அண்ணாமலையின் கூரை வீடு இடிந்து விழுந்தது. இதில் சிக்கி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
இதேபோல, சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்களுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.