கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் பின்புறம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு அண்மையில் நடத்தப்பட்ட சமையலா் பணிக்கான நோ்காணலின்போது, லஞ்சம் பெறப்பட்டதாக விழுப்புரம், கடலூா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் மற்றும் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் அமுதா, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் யுவராஜ், காவல் ஆய்வாளா் ஜேசுதாஸ் உள்ளிட்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், சமையல் பணிக்கு லஞ்சம் பெறப்பட்டது தெரிவந்தது. இதையடுத்து அலுவலக உதவியாளா் செல்வராஜுக்கு சொந்தமான நீலமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி ரூ.6 லட்சம் ரொக்கத்தையும், அதே அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரியும் எழில்மாறன் காரிலிருந்து ரூ.31,500 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் பிரகாஷ்வேலிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சோதனை நடைபெற்றது.