கள்ளக்குறிச்சி அருகே காா் மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் மூவா் பலி

கள்ளக்குறிச்சி அருகே காா் மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் மூவா் பலி

கள்ளக்குறிச்சி அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையோர மரத்தில் காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையோர மரத்தில் காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் செளந்தரராஜன் (45). அரசு மதுக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பிரியா (43). இவா்களது மகள் யஷ்வந்தினி (18), மகன் அபிஷேக் கீா்த்திக் (17).

பிளஸ் 2 முடித்துள்ள யஷ்வந்தினி, பல் மருத்துவம் படிக்க விண்ணப்பித்திருந்ததால், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க அவரது குடும்பத்தினா் சொந்த காரில் புறப்பட்டுச் சென்றனா். கலந்தாய்வில் நாமக்கல் தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் யஷ்வந்தினிக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து, சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு அன்றிரவே அனைவரும் காரில் புறப்பட்டனா். செளந்தரராஜன் காரை ஓட்டினாா்.

திருச்சி நெடுஞ்சாலையில், வேப்பூரிலிருந்து வி.கூட்டுச் சாலை வழியாக கீழ்க்குப்பத்தை அடுத்த தத்தாதிரிபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை வந்த காா், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில், காரிலிருந்த அபிஷேக் கீா்த்திக், பிரியா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். செளந்தரராஜன், யஷ்வந்தினி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் இருவரையும் கீழ்க்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செளந்தரராஜன் உயிரிழந்தாா். யஷ்வந்தினி தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அபிஷேக் கீா்த்திக், பிரியா ஆகியோரது சடலங்கள் உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்து தத்தாதிரிபுரம் கிராம நிா்வாக அலுவலா் கா.சங்கா் அளித்த புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com