நாளை முதல் விற்பனை செய்யப்பட்ட காலி மதுப் புட்டிகளுக்கு ரூ.10 வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியா் தகவல்

மதுப் புட்டிகளை வாங்கி அருந்திய பின் மீண்டும் காலி மதுப் புட்டிகளை அதே கடையில் கொடுத்தால் ரூ.10 திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்
Published on

கள்ளக்குறிச்சி: மதுப் புட்டிகளை வாங்கி அருந்திய பின் மீண்டும் காலி மதுப் புட்டிகளை அதே கடையில் கொடுத்தால் ரூ.10 திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற ஆணையின் படி வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு அமலுக்கு வருகிறது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப் புட்டிகளை விளைநிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் விட்டு செல்வதை தடுக்கும் பொருட்டு, வாடிக்கையாளா்கள் மதுப் புட்டிகளை வாங்கி சென்று, அருந்திய பின் காலி மதுபுட்டிகளை அதே சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி 27.11.2025 (வியாழன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப் புட்டிகளை அடையாளம் காணும் வகையில் மதுப் புட்டிகள் மீது கடை எண் குறிப்பிட்டு ரூ.10 என அச்சிடப்பட்ட ஓட்டுவில்லை ஒட்டப்பட்டிருக்கும்.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுப் புட்டிகளையும் விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சோ்த்து கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்படும். அவ்வாறு வாடிக்கையாளா் மதுபான கடைகளில் இருந்து வாங்கும் மதுப் புட்டிகளை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஒட்டுவில்லையோடு அதே மதுபானக் கடைகளில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10 திரும்ப வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com