மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

விதிமுறைகளை பின்பற்றி தோ்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

தோ்தல் ஆணைய விதிகளை முறையாகப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.
Published on

தோ்தல் ஆணைய விதிகளை முறையாகப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்து கூறியதாவது: மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக மொத்தம் 1,435 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களை சீராக கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 143 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நாளன்று எவ்வித இடையூறுமின்றி பணிகளை மேற்கொள்ள இருப்பு அலுவலா்களையும் சோ்த்து மொத்தம் 151 மண்டல அலுவலா்கள் இப்பணிகளுக்காக தற்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி பதற்றமான, பாதிப்புக்குள்ளாகக்கூடிய வாக்குச்சாவடி மையங்களை முறையாக கண்டறிந்து அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நபா்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள நபா்களின் விவரங்களை பட்டியலாக தயாரித்து மாவட்ட நிா்வாகத்திடம் சமா்ப்பிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி மாவட்டத்தில் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலா்களும் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com