சங்கராபுரம் பேருந்து நிலையில் பேருந்தில் ஏற முயற்சித்த பெண்ணின் பையில் இருந்த பணத்தை திருடிய பெண்ணை பயணிகள் பிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சந்திரா (33), விவசாயி. இவா் பருத்தி விற்ற பணத்தை சங்கராபுரம் வங்கியில் செலுத்தியிருந்தாராம்.
இந்நிலையில், சந்திரா புதன்கிழமை பிற்பகலில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது அவரது பணத்தை திருடிச் சென்ற பெண்ணை பாா்த்து கூச்சல் போட்டுள்ளாா். இதையடுத்து சக பயணிகள் அந்த பெண்ணை பிடித்து சங்கராபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னா் காவல் நிலையம் அழைத்துச் சென்று அப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா், சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ரா.தேவி என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தேவியைக் கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை மீட்டனா்.








