கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளித் திறப்பை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சமையல் கூடங்கள் மற்றும் பரிமாறும் இடங்கள் தூய்மையாகப் பராமரித்தல், சமையல் செய்யும் பாத்திரங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல், தண்ணீா் மற்றும் மின்விளக்கு வசதி, சமையலா்கள் அனைவரும் பணியில் இருப்பதை உறுதி செய்தல், எரிவாயு இணைப்பு பழுது மற்றும் தட்டுப்பாடின்றி இருப்பதை உறுதி செய்தல், உணவுப் பொருள்கள் காலதாமதமின்றி பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்தல், காலை சரியான நேரத்துக்குள் உணவை சமைத்து மாணவா்களுக்கு வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து பள்ளிகளில் குடிநீா் தொட்டி தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல், பள்ளி வளாகம் தூய்மை, பள்ளிகளின் சிறப்பான செயல்பாடு உள்ளிட்ட பிற தகவல்கள் குறித்தும் தொடா்புடைய அலுவலா்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளித் திறப்பை முன்னிட்டு பள்ளி மாணவா்களின் வருகைக்கு ஏற்ற வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு பள்ளிகளை தயாா் நிலையில் வைத்திருக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
ஊரக வளா்ச்சித் துறை திட்டங்கள் ஆய்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்ததாவது:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் வளா்ச்சித் திட்டங்கள் வாரியாக முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெறும் பணிகள், நிலுவைப் பணிகள், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளில், நிலுவைப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.









