புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு வரும் ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன். இவர், கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோயில் வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி சி.எஸ்.முருகன் இவ் வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை வந்தது. இந்த விசாரணையின்போது காஞ்சிபுரம் சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ரகு, கதிரவன், அப்பு உள்பட 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஜெயேந்திரர் உள்பட மற்றவர்கள் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சியாக மாறிய ரவிசுப்பிரமணியமும் ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்குரைஞர் பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். இத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு வரும் ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் தேவதாஸ் பதில் அளிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.