
ரூ.80 கோடியில் பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
ரூ.80 கோடி செலவில் திப்ராயப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் என்.ரங்கசாமி திறந்து வைத்தார்
ரூ.80 கோடி செலவில் திப்ராயப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் என்.ரங்கசாமி திறந்து வைத்தார்.
உப்பளம், முதலியார்பேட்டை தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.80 கோடி செலவில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த பாதாள கழிவுநீர் அகற்றல் சுத்திகரிப்பு நிலையம் திப்ராயப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியது:
பாதாள சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.280 செலவில் பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், தற்போது ரூ.300 கோடி செலவில் பணிகள் முடிந்துள்ளன.
பாதாள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் நீர் சுத்தமானதாகும். வெளிநாடுகளில் இதை குளித்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதால் கடலில் விடுகிறோம்.
இலவச இணைப்புகள்
புதுச்சேரியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதற்காக வீடுகளில் இருந்து இணைப்புகளை இலவசமாக வழங்க பொதுப்பணித் துறை மூலம் அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வீடு கட்டி வருகிறோம். லாம்பர்ட் சரவணன் நகரில் 1136 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சிறிது சிறிதாக வீடுகளை ஒதுக்கி வருகிறோம். இதன் மூலம் புதுவையில் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்.
நகரில் ரூ.21 கோடி மதிப்பில் அனைத்துச் சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தரப்படுகிறது. 7000 பேர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடலோர காவல்படையில் 200 ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்படுவர். மீனவர்களும் பயன்பெறலாம்.
அனைத்து தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
என்.ஆர். காங்.-அதிமுக மோதல்
இதனிடையே, பாதாள சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவைமுன்னிட்டு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்த் முதல்வரை வரவேற்று ஆளும் கட்சி பேனர், கொடிகளை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இவ்விழா அரசு விழா, கட்சி பேனர்களை அகற்ற வேண்டும் எனக் கூறி,
விழா மேடையில் அதிமுக கொடியை கட்டி விட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பேனர்கள், கொடிகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






