மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி குறித்த செயல்விளக்க முகாம்

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் வியாழக்கிழமை வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவியின் செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2016, 10:27 am

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் வியாழக்கிழமை வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவியின் செயல் விளக்க முகாம் நடைபெற்றது.
 இமாலயா அக்ரோ-டெக் நிறுவனம் மூலம் வேளாண் துறை இயக்குநர் அ.ராமமூர்த்தி, இணை இயக்குநர் த.சோமலிங்கம், துணை இயக்குநர் க.மதி, துணை வேளாண் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான விவசாயிகள் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெற்றது.
 கருவியின் சிறப்பம்சங்கள்: காய்ந்த மற்றும் ஈரமான வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் திறன்கொண்ட இக்கருவியைக் கொண்டு தென்னை, வாழை, மரவள்ளி, பப்பாளி, முருங்கை மற்றும் இன்னும் பிற வேளாண் கழிவுகளைப் பொடியாக்கலாம். இதன் மூலம் வேளாண் கழிவுகளை விரைவாக மக்க வைத்து, இயற்கை உரத்தை எளிதில் தயாரிக்க முடியும். பொடிக்கப்பட்ட வேளாண் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து, மண் வளத்தை மேம்படுத்த முடியும்.
 மேலும், இது நிலப்பரப்பை போர்வையைப் போல் மூடி நீர் ஆவியாதலை தடுத்து, மண்ணின் ஈரப்பதத்தைக் காப்பதுடன், நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
 வேளாண் கழிவுகளை அப்புறப்படுத்த ஆகும் செலவீனத்தை பெருமளவில் குறைப்பதுடன் நிலத்தைச் சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. கழிவுகளை எரித்து வீணாக்காமல், விரைந்து உரமாக மட்கச் செய்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கலாம்.
 இந்தக் கருவியை டிராக்டரைக் கொண்டு இயக்குவதால், நிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் பொடியாக்கப்பட்ட கழிவுகளை எளிதில் பரப்பலாம்.
 கருவியின் விலை ரூ. 90 ஆயிரம்: இந்தக் கருவியின் விலை ரூ. 90,000 ஆகும். இவற்றுடன் 5 சதவீதம் கூடுதல் மதிப்பீடு வரியாக ரூ. 4,500 மற்றும் கருவியை கொண்டு சேர்ப்பிக்க ஆகும் போக்குவரத்து செலவு ரூ. 3,000 என மொத்தம் ரூ. 97,500 ஆகும. அடக்க விலை ரூ. 90,000-ல் 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும்.
 கருவியின் செயல் விளக்க முகாம் ஏற்பாட்டினை வேளாண் அதிகாரி (பொறியியல்) வ.சு.பார்த்திபன் மற்றும் வேளாண் அதிகாரிகள் ஜோதிகணேஷ், பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.