ரெளடி செந்திலிடம் போலீஸார் தீவிர விசாரணை

ரெளடி தட்டாஞ்சாவடி செந்திலை ஒரு நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
Updated on
1 min read

ரெளடி தட்டாஞ்சாவடி செந்திலை ஒரு நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையைச் சேர்ந்தவர் முரளி
(30). கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ரௌடி தட்டாஞ்சாவடி செந்திலுக்குச் சொந்தமான இடத்தில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார்
மடுவுபேட் சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், ஜீவா நகர் அமரன், அசோக், சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் தட்டாஞ்சாவடி செந்தில் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
செந்திலை சிறப்பு அதிரடிப்படையினர் தேடி வந்தனர்.
இதனிடையே,  நாவல்குளத்தைச் சேர்ந்த பாரி (வயது 35) கடந்த மாதம்  கைது செய்யப்பட்டார். அவர் மூலம் மதுரையில் பதுங்கியிருந்த செந்திலை போலீஸார் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர்.
 புதுவை குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி தயாளன் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கோரிமேடு போலீஸார் செந்திலை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி செந்திலை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, செந்தில் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
சுந்தர் தனக்கும் முரளிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதாகவும், தான் சமாதானமாகவே செல்ல விரும்புவதாகவும் கூறினார். மேலும், முரளியையும் தன்னையும் ஒன்று சேர்த்து வைக்கும்படியும் அவன் கேட்டுக் கொண்டார்.
இருவரையும் சமாதானப்படுத்தும் எண்ணத்தில் நான் என் வீட்டிற்கு அழைத்தேன். அவர்கள் இருவர் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் ஆயுதங்கள் கொண்டு வந்தனரா என்பதனை நான் கவனிக்க மறந்தேன். சமாதானம் பேசிக்கொண்டிருக்கும்போதே இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில் முரளி கொலை செய்யப்பட்டார்.
எனக்கே தெரியாமல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் நான் மாட்டிக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் மீண்டும் தட்டாஞ்சாவடி செந்திலை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com