இயற்கை வேளாண் முறைக்கு மாறினால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று வேளாண்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 3 நாள்களாக நடைபெற்ற 32-வது மலர், காய், கனி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது.
நிறைவு விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:
நிதி நெருக்கடி இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு விவசாயத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதற்காகவும், புதிய முயற்சிகளை அறியவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.
அடுத்த மலர் கண்காட்சி 5 நாள்கள் நடத்த முன்கூட்டியே திட்டமிடப்படும். இம்முறை ரூ. 15 லட்சம் வரை வருவாய் கிடைத்திருக்கும்.
விவசாயிகள் வேளாண் சாகுபடியுடன் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு உள்ளிட்ட உப தொழில்களிலும் ஈடுபட வேண்டும். அப்போது தான் கூடுதல் வருமானம் கிடைக்கும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் குறைவான செலவில் அதிக வருவாய் ஈட்டலாம்.
விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று வேளாண் தொழில்நுட்பங்களை விளக்க வேண்டும் என்றார்.
கண்காட்சியில் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கானோர் கண்காட்சியை பார்த்தனர்.
அதேபோல, பல்வேறு காய்கறிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை காய்கறி ராணியாக பூர்ணாங்குப்பம் செந்தாமரையும் மற்றும் மலர் ராஜாவாக காலாப்பட்டு கண்ணபிரானும் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டனர். விழாவில், தொகுதி எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன், வேளாண் இயக்குநர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.