காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் புதுவை அரசு சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் 16.2.2018-இல் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்டத்தை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டத்தில் வாரியம், கமிஷன், கண்காணிப்புக் குழு என பல கருத்துகளை குறிப்பிட்டுள்ளனர். புதுவை அரசை பொருத்தவரை கண்காணிப்புக் குழு, கமிஷன் என இருப்பதை விட முழு அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம்தான் முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க முடியும்.
அப்படி இருந்தால்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாநில அரசுகள் அமல்படுத்தாத பட்சத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட முடியும். எந்தெந்த காலங்களில் எத்தனை டி.எம்.சி. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்காணிக்கவும், உத்தரவை மீறும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முழு அதிகாரம் இருந்தால்தான் காவிரி மேலாண்மை வாரியம் சரியான முறையில் செயல்படும்.
மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்பட்டது என்ற கருத்தை கொள்ள முடியும். மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டத்தை மேலோட்டமாகத்தான் பார்த்தேன். முழுமையாகப் படித்துவிட்டு மாற்றங்கள் தேவை என்றால் உச்ச நீதிமன்றத்தில் புதுவை அரசின் கருத்தை தனியாக மனு தாக்கல் செய்து தெரிவிப்போம்.
ஒரு காலத்தில், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் காற்றில் பறக்கவிட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்றார் நாராயணசாமி.