வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக உரிய நீரைப் பெற முடியும்

உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு உரிய நீரைப் பெற முடியும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Updated On :21 மே 2018, 2:56 am

உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு உரிய நீரைப் பெற முடியும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பித்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குள் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டால், மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்று ஒரு ஷரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டாலும், புதுவை அரசு அந்த ஷரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தது. மேலும், அந்த ஷரத்தின்படி மீண்டும் மத்திய அரசிடம்தான் நாம் முறையிட வேண்டியிருக்கும். மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டால், மறுபடியும் நீதிமன்றத்துக்குத்தான் மாநில அரசுகள் செல்ல நேரிடும். 
எனவே, நதி நீர் விவகாரத்தில் அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்று புதுவை சார்பில் மனு தாக்கல் செய்தோம்.
உச்ச நீதிமன்றம் புதுவை அரசின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், அரசு வழக்குரைஞருக்கு  நன்றியும் தெரிவித்தது.
இதன்மூலம் மறுபடியும் மத்திய அரசின் கதவை தட்டவேண்டியதில்லை. ஆணையத்தின் மூலம் நீரை பெறுவதற்கான வழிமுறைகளைச் செய்ய முடியும். இது புதுவை மாநிலத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, காவிரி நீரைப் பெறும் மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
பிளஸ் 2 தேர்வில் சில பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. 
இதற்கு முக்கிய காரணம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நெருக்கமான உறவு இல்லாததே. பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணிக்காததும் மற்றொரு காரணமாகும்.
நிகழாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து மாதந்தோறும் கூட்டம் நடத்தி, பிரச்னைகளை அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அமைச்சர் கமலக்கண்ணன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்மூலம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை ஆன்லைனில் நடத்துவதைப் போல, கலைக்  கல்லூரிகளுக்கான சேர்க்கையையும் ஆன்லைன் மூலம் நடத்த அரசு அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எனினும், அவ்வாறான சேர்க்கை நடைமுறைக்கு வந்து, அது கிராமப்புற மாணவர்களைப் பாதிக்காமல் இருந்தால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.


"அரசியலில் இதெல்லாம் சகஜம்'
முதல்வர் நாராயணசாமியுடனான பேட்டியின் போது, கர்நாடகா மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளதே என செய்தியாளர்கள் கேட்டனர். 
அதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, இது அரசியல் ரீதியாக கட்சிகள் எடுக்கும் முடிவு. காங்கிரஸ் கொடுக்கிறது; மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றுக் கொள்கிறது. பிகாரில்கூட அதிக இடம் பெற்ற லாலு,  நிதீஷ்குமாரிடம் முதல்வர் பதவியைக் கொடுத்தாரே. அரசியலில் இதெல்லாம் சகஜம் என நகைச்சுவையுடன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.