புதுவையில் திங்கள்கிழமை ஒரே நாளில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 11,260 பேருக்கு போக்குவரத்து போலீஸார் நோட்டீஸ் வழங்கினர்.
புதுவையில் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் நாராயணசாமியால் அறிவிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் கைவிடப்பட்டது. இதனிடையே, புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் 11-ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று போலீஸ் டிஜிபி சுந்தரி நந்தா திடீரென உத்தரவிட்டார்.
இந்த நிலையில், புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவளிக்காமல் வழக்கம் போல, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றனர். பல்வேறு இடங்களில் போலீஸார் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகன எண்களை குறிப்பெடுத்துக்கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட எண்களைக் கொண்டு அதன் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், எச்சரித்தும் அனுப்பினர்.
இதன்படி, திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் தலைக்கவசம் அணியாமல் வந்த 11,260 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் தெரிவித்தார்.