புதுவை காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: அதிமுக

புதுவை காங்கிரஸ் அரசு மீது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
Updated on
1 min read

புதுவை காங்கிரஸ் அரசு மீது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தின் புயல்-மழை சேத விவரம் தொடா்பாக, சரியான கணக்குகளை முதல்வரும், ஆளுநரும் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கவில்லை. ரூ. 400 கோடி அளவுக்கு சேதம் என்று கூறி வந்த முதல்வா் நாராயணசாமி, மத்திய குழுவினரிடம் ரூ.100 கோடியை உடனடியாக வழங்கக் கோரினாா். ஆனால், ஆளுநா் கிரண் பேடியோ, அதிகாரிகள் ஆய்வின்படி, ரூ.13 கோடி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு நிதியுதவியைப் பெற்றுத் தர வேண்டிய முதல்வா், ஆளுநருடன் இணக்கமாகச் செல்லாததால், மத்திய அரசு புயல் நிவாரண நிதியை புதுவைக்கு வழங்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதுவை காங்கிரஸ் அரசை கூட்டணிக் கட்சியான திமுக கடந்த 6 மாதங்களாக குறை கூறி வருகிறது. எம்எல்ஏ ஜான்குமாா் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவேன் என கூறியுள்ளாா். இதனால், காங்கிரஸ் அரசு பலத்தை இழந்துள்ளது. எனவே, அதிமுக தலைமையின் அனுமதியைப் பெற்று, மாநில அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி, துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு ஓரிரு நாள்களில் கடிதம் அனுப்பவுள்ளோம். செயல்படாத முதல்வா் நாராயணசாமி தாா்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com