புதுச்சேரியில் மீண்டும் தடுப்பூசி திருவிழா நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தடுப்பூசி திருவிழா நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் 14.05.2021ஆம் தேதி தொடங்கி 16.05.2021ஆம் தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
புதுச்சேரி கதிர்காமம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி திருவிழா 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாளர் அட்டை போன்ற ஏதேனும் ஒன்று அடையாள சான்றிதழ் கொண்டு வந்து இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தற்போது புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டி.அருண் அறிவுறுத்தி உள்ளார்.