ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரி வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் துறைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:14 pm

DIN

புதுச்சேரி வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுவையில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடியை மேம்படுத்துவது, வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவித்து வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாக மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் மூா்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். புதுவை வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி, பாசிக் வேளாண் பிரிவு ஆகிவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதுவை வேளாண் துறை, பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎச்ஆா்) ஆகியவை இணைந்து புதுவை மாநிலத்துக்கு உகந்த வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியும், அதன் மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் தரமான விதைகளை புதுவை விவசாயிகளின் மூலம் உற்பத்தி செய்து அவற்றை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விற்பனை செய்வதென முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி விவசாயக் கல்லூரி மாணவா்களுக்கு உயா் ஆராய்ச்சி கல்விக்கான நேரடி ஆய்வுக் கல்வியை ஏற்பாடு செய்து தருவதென முடிவெடுக்கப்பட்டது. மேலும், பல்வேறு பயிற்சிகளை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியின் தனித்தன்மை வாய்ந்த தேங்காய்த்திட்டு வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் உதவி செய்யும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

புதுச்சேரிக்கு ஏற்ற ஏ.ஆா்.கே.எச்.ஏ. ரக காய்கறி விதைகள், வேளாண் தொழில்நுட்பங்களை இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.