புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, மின்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து புதன்கிழமை இரவு புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில், முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | 'நான் ஒரு தமிழன்': ராகுல் காந்தி
மின்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், மின் துறை தலைவர் சண்முகம், புதுவை மின் ஊழியர்கள் போராட்டக்குழு தலைவர் டி. அருள்மொழி, பொதுச் செயலாளர் பி.வேல்முருகன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும், நல்ல நிலையில் இயங்கி வரும் புதுவை அரசின் மின் துறை தனியார் மயமாக்கப்பட்டால், மின் கட்டணம் உயர்த்தப்படும், ஊழியர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையின் சொத்துக்கள் தனியார் வசமாகும். அதனால் மின்துறை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்" என, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.