புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி வீட்டு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வே.நாராயணசாமி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
காங்கிரஸ் மாநில செயலாளர்கள் சூசைராஜ், நீல கங்காதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், கரோனா பேரிடர், வேலைவாய்ப்பின்மை போன்ற நெருக்கடியோடு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவை பொதுமக்களிடம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இருசக்கர வாகனம், சிலிண்டர் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல், புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளின் முன்பு பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.