புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (மாா்ச் 3) நடைபெற்று வருகிறது.
இதில் புதுவையில் 63 ஆயிரத்து 853 குழந்தைகள், காரைக்காலில் 12 ஆயிரத்து 257 குழந்தைகள், மாகியில் 1685 குழந்தைகளும், ஏனாமில் 3539 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் புதுவை கதிர்காமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "புதுவை மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு புதுவை மக்களவைத் தொகுதி ஓதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இம்முறையும் காங்கிரஸுக்கு ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், இம்முறை புதுவை மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.