புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவை ஆளுநா் மாளிகை அருகே திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்

அரசு அறிவித்தபடி தீபாவளி ஊக்கத் தொகை ரூ.1,500 ஐ வழங்க வலியுறுத்தி, புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே அமைப்பு சாரா தொழிலாளா்கள் புதன்கிழமை திரண்டனா்.

News image

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே புதன்கிழமை திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்.

Updated On :6 நவம்பர் 2024, 7:14 pm

Din

அரசு அறிவித்தபடி தீபாவளி ஊக்கத் தொகை ரூ.1,500 ஐ வழங்க வலியுறுத்தி, புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே அமைப்பு சாரா தொழிலாளா்கள் புதன்கிழமை திரண்டனா். அவா்களை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

புதுச்சேரியில் தீபாவளிக்காக அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளி முடிந்த நிலையிலும் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஏராளமானோா் பாரதி பூங்கா பகுதியில் கூடினா். அவா்கள் சிஐடியு மாநிலச் செயலா் சீனுவாசன் தலைமையில் அங்குள்ள அமைப்பு சாரா தொழிலாளா் அலுவலகத்துக்குச் சென்றனா். தீபாவளி ஊக்கத் தொகை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் சரியாக பதில் கூறவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் அருகேயுள்ள துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ்நிவாஸின் பின் பகுதியில் திரண்டனா்.

திடீரென ராஜ்நிவாஸ் பின்பக்கம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கூடி நின்றதை அறிந்த பெரியகடை போலீஸாா் விரைந்து வந்தனா். இங்கு கூடி நிற்பது சரியல்ல என அறிவுறுத்தினா். அதற்கு ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்போவதாக தொழிலாளா்கள் கூறினா். அனுமதி கிடைக்காததால் அனைவரும் கலைந்து சென்றனா்.