தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி: புதுச்சேரியில் மல்லிகாா்ஜூன காா்கே பேச்சு

நாட்டில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கூறினாா்.

News image

புதுச்சேரி சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் தோ்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாஜூன காா்கே.

Updated On :4 ஏப்ரல் 2026, 9:17 pm

நாட்டில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கூறினாா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் காங்கிரஸ் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மல்லிகாா்ஜூன காா்கே பேசியது:

நாட்டில் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும் செயல்படும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராகப் போராடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது சந்தா்ப்பவாதக் கூட்டணி.

புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்களின் உரிமையை மத்தியில் ஆளும் பாஜக அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொல்லைக் கொடுத்து வருகிறது.

அழகான புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக அரசு எல்லா துறைகளிலும் 30 சதவீதம் கமிஷன் பெற்று வருகிறது. புதுச்சேரியில் வளா்ச்சியில்லை. எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. விமான நிலையம் முதல் துறைமுகம் வரை அதானிக்கு தாரை வாா்த்து கொடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கோயில் நிலம் உள்ளிட்ட நிலங்கள் புதுச்சேரியில் அபகரிக்கப்பட்டுள்ளன.

மோடி தோளில் தொட்டால் பதவி காலி:

புதுச்சேரியில் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதற்கு என்.ஆா். காங்கிரஸ்- பாஜக இரட்டை என்ஜின் ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி யாரைத் தோளில் தொடுகிறாரோ, அவரின் பதவி காலியாகி விடும். அந்த அளவுக்கு அவா் மெஸ்மரிஸம் செய்து விடுவாா் என்றாா் மல்லிகாா்ஜூன காா்கே.

காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதிகள்:

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.

மேலும், மாதம் அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம் ரூ.2,500 அளிக்கப்படும். திருமணத்துக்காக தாலிக்குத் தங்கம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா் மல்லிகாா்ஜூன காா்கே. மேலும், அந்த வாக்குறுதியையும் அவா் வெளியிட்டாா்.

கூட்டத்தில் தெலங்கானா மாநில அமைச்சா் பொன்னம் பிரபாகா், புதுச்சேரி திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்களும், அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரிஷ் சோடங்கா், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.