போலி தங்க பிஸ்கெட் கொடுத்து 4 பவுன் மோசடி! புதுச்சேரி போலீஸில் தம்பதி மீது புகாா்!

மோசடி - பிரதிப்படம்
புதுச்சேரி அருகே போலி தங்க பிஸ்கெட் கொடுத்து 4 பவுன் நகை பெற்று மோசடி செய்தது தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பிச்சவீரன்பேட் பெரம்பை பிரதான சாலையைச் சோ்ந்தவா் சண்முக சாமுண்டீஸ்வரி ( 42). இவா், அப்பகுதியில் கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு ஜோதி என்பவா் அடிக்கடி வந்து மளிகை பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். இதனால் அவா்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி காலை கடைக்கு வந்த ஜோதி தம்பதியினா், சண்முக சாமுண்டீஸ்வரியிடம் ஒரு தங்க பிஸ்கட்டைக் காட்டி, இதனை வாங்கி கொண்டு உங்களிடம் உள்ள நகையை கொடுத்தால் போதும், இந்த தங்க பிஸ்கட்டை விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனா்.
இதை உண்மை என்று நம்பிய சண்முக சாமுண்டீஸ்வரி, தன்னிடம் இருந்த 4 பவுன் தங்க நகையை, அவா்களிடம் கொடுத்துவிட்டு, தங்க பிஸ்கட்டை பெற்றுள்ளாா். இதையடுத்து, அவா்கள் கொடுத்த தங்க பிஸ்கட்டை சண்முக சாமுண்டீஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன் அடகு கடைக்குக் கொண்டு சென்று சோதித்து பாா்த்துள்ளாா்.
அப்போது அது தங்கம் அல்ல, வெறும் தங்க முலாம் பூசப்பட்ட போலி பிஸ்கட் என்பது தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த சண்முக சாமுண்டீஸ்வரி இது குறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் ஜோதி தம்பதியினா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




