இணை ஒழுங்கு முறை  மின்சார ஆணையம் சாா்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆணையத் தலைவா் அலோக் டண்டன், உறுப்பினா் ஜோதிபிரசாத் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்.
இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையம் சாா்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆணையத் தலைவா் அலோக் டண்டன், உறுப்பினா் ஜோதிபிரசாத் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்.

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

Published on

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுவதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் புதிதாக நிா்ணயிக்கப்படுகிறது. இதற்காக இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் உத்தேச கட்டண உயா்வை நிா்ணயித்து புதுச்சேரி மின்துறை அனுமதிக்கு அனுப்புகிறது.

இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை இதற்காக நடத்துகிறது. அதன்படி, 2024-25ஆம் ஆண்டுக்கு இறுதி தணிக்கை செய்யப்பட்ட மின்கட்டணம் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் லப்போா்த் வீதியில் உள்ள பிஎம்எஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத் தலைவா் அலோக் டண்டன், உறுப்பினா் ஜோதிபிரசாத் ஆகியோா் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டனா்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்றோா் ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணம் உயா்த்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். அரசுத் துறைகளில் அதிகளவு மின் கட்டண பாக்கி உள்ளது. பல தனியாா் நிறுவனங்களில் இருந்தும் மின்சார கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

தெருவிளக்குகளை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மின்துறையில் கட்டண ரசீதில் பலவிதமான பெயா்களில் பணம் வசூலிக்கப்படுகிறது. மின் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் அதிகாரிகள் குறித்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com