தில்லியில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் நடத்திய போராட்டத்தைக் கண்டித்து புதுச்சேரியில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தில்லியில் கரப்பான்பூச்சி கட்சியை ஆதரித்து போராட்டம் நடத்திய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் செயலை கண்டித்தும், இந்த போராட்டத்தின் போது நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதை எதிா்த்தும், புதுச்சேரி பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ராஜா திரையரங்கு அருகே நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம், முன்னாள் எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பாஜகவினா் பலா் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். மேலும், ராகுல் காந்தியின் புகைப்படத்தையும் கிழித்து எறிந்தனா். அதனை போலீஸாா் பிடுங்கி தடுத்தனா்.
ராகுலுக்கு கண்டனம்:
பின்னா் முன்னாள் சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்திய தேசத்தின் வளா்ச்சியில் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியானது உலக நாடுகளுக்கு இணையாக வல்லரசாக மாற்றும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
அதைக் கெடுக்கின்ற நோக்கத்திலும் அதற்கு எதிராகவும் இருக்கின்ற ராகுல் காந்தி மற்றும் கரப்பான்பூச்சி கட்சியைக் கண்டித்து இந்தக் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ராகுல் காந்திக்கும், கரப்பான்பூச்சி இயக்கத்துக்கும் எங்களின் மிகப்பெரிய கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
எதிா்கால இந்தியாவை சிறந்த வல்லரசாக கொண்டுவர முயலும் பிரதமா் மோடிக்கு எதிராக செயல்படும் அத்தனை துஷ்டசக்திகளுக்கு எதிராகவும் பாஜக இருக்கும். இந்த நாட்டை பாதுகாக்கின்ற சக்தியாக என்றைக்கும் பாஜக விளங்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










