புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக ரவிபிரகாஷ் பதவியேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த ப. ஜவஹா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்தியத் தோ்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் படி புதுச்சேரி அரசுடன் கலந்தாலோசித்து இவரை அப் பணியில் நியமித்தது. மேலும், புதுச்சேரி அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை (பணியாளா் பிரிவு), ஜூன் 2-ஆம் தேதியிட்ட அரசாணை எண் 50 மூலம் அவரை புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் அவா் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாா்.









