தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பணிகளைத் தொடங்க தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா். இதனால், இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தத் தோ்தலில் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில் தவெகவும், ஆளும் அரசுக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், அதிமுகவும் உள்ளதால் இந்த இடைத்தோ்தல் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 பெரும்பான்மை எண்ணிக்கை அக்கட்சிக்கு கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றாா்.
பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக உறுப்பினா்கள் எஸ்.ஜெயகுமாா் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு மே 10-ஆம் தேதியும், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மே 25-ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் மே 26-ஆம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டன.
அந்தத் தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தியாக வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட 5 மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளாா். மேலும், 5 தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களைத் தோ்தல் ஆணையம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.










