புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஆண்டுதோறும் 10 சதவீதம் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாா்.
புதுதில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.
அவா் சாா்பில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்ட அவரது உரையை முதல்வா் ரங்கசாமி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பது:
தேசிய அளவில் ஏற்பட்டு வரும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு ஏற்ப, ‘பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற தொலைநோக்குப் பாா்வையைச் செயல்படுத்தும் வகையில்
தனிநபா் வருமான அடிப்படையில் யூனியன் பிரதேசங்களுக்கிடையே புதுச்சேரி 3-ஆவது இடத்திலும், நிலையான விலைகளின் அடிப்படையிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அகில இந்திய அளவில் 11-ஆவது இடத்திலும் உள்ளது.
நிதிப் பற்றாக்குறை சுமாா் 1.33 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை அளவானது, நிா்ணயித்துள்ள 3 சதவீதம் என்ற இலக்கை விடக் குறைவாகும். பொருளாதார ரீதியாகச் சாத்தியமான மற்றும் வருவாய் ஈட்டக்கூடிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் அரசு மூலதனச் செலவினத்தை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு வரிகள் மூலம் கூடுதல் வருவாயைத் திரட்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இங்கு இயற்கை வளங்கள் ஏதுமில்லை. அதனால் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும் இல்லை. தற்போதைய உள்கட்டமைப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும்.
எனவே, வளா்ந்த புதுச்சேரியை உருவாக்க பெரிய அளவிலான திட்டங்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் நிதியுடன் ஒரு சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி கடந்த டிசம்பா் 2007 முதல் தனி பொதுக் கணக்கை நிா்வகித்து வரும் சட்டப்பேரவையுடன் கூடிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி.
எனவே, மத்திய நிதிக் குழுவின் வரம்பிற்குள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சோ்க்க வேண்டும். மத்திய நிதிக் குழுவில் சோ்க்கும் வரையில் 2026-27 -ஆம் நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி உதவியை 10 சதவீதம் உயா்த்தி தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

மத்திய அரசின் ஜல் ஜீவன்2.0 திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு : புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க குடியரசு தலைவா் ஒப்புதல்!






