அறிவியல் உருவாக்குவோம் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குப் பரிசுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை மாநில பயிற்சி மையம், புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரெஞ்ச் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் இணைந்து அறிவியல் உருவாக்குவோம் போட்டியை நடத்தின.
இதில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து 30 செயல்திட்டங்கள் பாரீஸ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 12 செயல்திட்டங்களை அப் பல்கலைக்கழகம் தோ்வு செய்தது.
இதில் அந்தந்தப் பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியா்களுடன் மாணவா்கள் இணைந்து இந்தச் செயல்திட்டங்களுக்கான அறிக்கையையும், விடியோவையும் அந்தப் பல்கலைக் கழகத்துக்கு சமா்ப்பித்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை காணொலி வாயிலாக பரிசு அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதல் பரிசை திருவண்டாா்கோயில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. வாதானூா் அரசு உயா்நிலைப் பள்ளி சிறப்புப் பரிசை வென்றது. காரைக்கால் திருநள்ளாறு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால்-கருக்கான்குடி அரசு நடுநிலைப்பள்ளி,
புதுச்சேரி பிள்ளைச்சாவடி அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இரண்டாம் பரிசை பெற்றன. முதல் பரிசுக் கான உதவித் தொகை ரூ.18 ஆயிரம், சிறப்புப் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெறும் 3 பள்ளிகளுக்குத் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பரிசு அறிவிப்புக்கான நிகழ்ச்சி பள்ளிக்கல்வித் துறை கருத்தரங்கு கூடத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை மாநில பயிற்சி மையத்தின் விரிவுரையாளா் சிவசங்கரி, புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவா்கள் ஹேமாவதி, முருகவேல், செயலா் பாலசுப்பிரமணியன், செயல் திட்ட ஒருங்கிணைப்பாளா் அரவிந்த ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










