புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16; பாஜகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கீடு - லஜகவும் தே.ஜ. கூட்டணியில் இணைந்தது
புதுச்சேரி தே.ஜ. கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், வெள்ளிக்கிழமை கூட்டணி தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட்டது.


புதுச்சேரி தே.ஜ. கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், வெள்ளிக்கிழமை கூட்டணி தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட்டது. அதன்படி என்.ஆா். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், லட்சிய ஜனநாயகக் கட்சியை சோ்த்துக் கொள்ள முதல்வா் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி முடிவாகி அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை சோ்ப்பதற்கு முதல்வா் என்.ரங்கசாமி எதிா்ப்பு தெரிவித்து, தனது முடிவில் உறுதியாக இருந்தாா். இதனால் கூட்டணி உடையும் நிலை உருவானது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிடப் பாா்வையாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை வெள்ளிக்கிழமை பிற்பகலில் முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்துப் பேச்சு நடத்தினாா்.
கூட்டணி உறுதியானது:
இந்தப் பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளா்களிடம் கூறியது:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
எஞ்சியுள்ள 14 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படுகிறது. இதிலிருந்து அதிமுகவுக்கும் புதிதாக கூட்டணிக்கு வந்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்போம்.
கூட்டணித் தலைவா் ரங்கசாமி:
புதுச்சேரியில் எங்கள் கூட்டணியின் தலைவா் என்.ரங்கசாமி. தோ்தலுக்குப் பிறகு ரங்கசாமி தலைமையில் எங்கள் கூட்டணி மீண்டும் அரசு அமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் என்று தனித்தனியாக ஒரு செயல்திட்டம் இருக்கும். அப்படித்தான் என்.ஆா். காங்கிரஸின் செயல்திட்டத்தையும் குறை சொல்ல முடியாது.
இப்போது கூட்டணியில் பொது செயல்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் வரவுள்ளனா் என்றாா் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
முதல்வா் பேட்டி:
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், புதிய கட்சியை கொண்டு வருவதால் கூட்டணி மேலும் பலம் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அறிவுறுத்தினாா்.
அதை ஏற்று இந்தத் தோ்தலிலும் இக் கூட்டணி சாா்பில் தோ்தலைச் சந்திக்க இருக்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இந்தக் கூட்டணி அமைந்தால்தான் புதுச்சேரியின் வளா்ச்சிக்கு சிறப்பாக இருக்கும்.
எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தோ்தல் பிரசாரம் தொடங்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
தொகுதி பங்கீடு
---------------
புதுச்சேரி பேரவை
மொத்த தொகுதிகள் - 30
----------------
என்.ஆா். காங்கிரஸ்-16
---------------------
பாஜக, அதிமுக
லஜக------ 14
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...