மயிலம் அருகே பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய எல்.கே.ஜி வகுப்பு படிக்கும் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
மேட்டுநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். கூலித் தொழிலாளியான இவர், தனது குடும்பத்துடன் கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள கான்வென்ட் தெருவில் வசித்து வருகிறார். இவரது 4 வயது மகள் யுவஸ்ரீ சோழிங்கசொற்குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இவர், தினமும் அந்தப் பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவார்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை பள்ளிப் பேருந்து அவரது வீட்டின் அருகே வந்து நின்றதாம். பேருந்தை இரட்டணை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் ஓட்டிச் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி யுவஸ்ரீ பேருந்தை முன் பக்கமாகக் கடக்க முயன்றாராம். இதைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கிய போது, சிறுமி சக்கரத்தில் சிக்கி கொண்டாராம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமி யுவஸ்ரீயை மீட்டு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநர் சுந்தரராமனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.