திருக்கோவிலூர்- கீழையூர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை, அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், உற்சவ பஞ்சமூர்த்திகளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு நமச்சிவாய எனும் பஞ்சாச்சர மந்திர கோஷத்துடன், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (வீரட்டானேஸ்வரர்), சிவானந்தவல்லி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வந்தனர். பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேர்கள் நிலையை அடைந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வாக, வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மஹா தீபாராதனை நடைபெற்று, சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நண்பகல் 12 மணிக்கு ஆலய வளாகத்தில் ஊடல் உற்சவமும், பிற்பகல் 12.30 மணிக்கு சூர்ணோற்சவமும் (மஞ்சள்நீர்) நடைபெற்று, பிற்பகல் ஒரு மணியளவில் தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோயில் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.