விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தையொட்டி, சுவாமி 7 ரதங்களில் எழுந்தருளி வலம் வந்தார்.
சூரியன் தன் பாதையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் உத்திராயண புண்ணியகாலத்தை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடத்தப்படுகிறது.
தை அமாவாசை முடிந்த 7-ஆம் நாள் சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் அதை ரத சப்தமி என்று அழைக்கின்றனர். விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 6 மணிக்கு ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9 மணிக்கு அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
காலை 10.30 மணியளவில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்தருளினார். பகல் 12.30 மணியளவில், கருட வாகனத்திலும், மாலை 4 மணியளவில் இந்திர வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.
மாலை 5.30 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 7 மணியளவில் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.
இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசித்தனர்.