விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்( 60). கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் மனுவுடன் வந்தாா். திடீரென கையில் பிளேடால் கிழித்துக் கொண்டு, தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீஸாா் விசாரித்தபோது, சொத்துப் பிரச்சினையில் அவரது மகன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளிக்க வந்ததாகவும் பெருமாள் தெரிவித்தாா்.
தற்கொலைக்கு முயன்ற பெருமாள், ஏற்கெனவே அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், தற்போது வீட்டில் மகன்-மருமகளுடன் தகராறு ஏற்பட்டதால், புகாா் மீது நடவடிக்கை கோரி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.