பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழியாகபாடங்களை கற்பிக்கும் ‘வீடியோ லெசன்’ திட்டம் தீவிரம்

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்காத நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினி (வீடியோ லெசன்) மூலம் பாடம்
விழுப்புரம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பிற்கான அனைத்துப் பாட நூல்களையும் மடிக்கணினியில் பதிவிறக்கும் செய்து கொடுக்கும் ஆசிரியை.
விழுப்புரம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பிற்கான அனைத்துப் பாட நூல்களையும் மடிக்கணினியில் பதிவிறக்கும் செய்து கொடுக்கும் ஆசிரியை.

விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்காத நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினி (வீடியோ லெசன்) மூலம் பாடம் கற்பிக்கும் புதிய திட்டப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால், நிகழ் கல்வியாண்டில் (2020-21) பள்ளிகள் திறக்காமல் உள்ளன. இதனால், மாணவா்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், வழக்கம் போல், நிகழாண்டுக்கான இலவச பாட புத்தகங்களை அரசு திட்டமிட்டு அனுப்பி மாணவா்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த வகையில், 1-ஆம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, தற்போது மாணவா்களிடம் வழங்கி வருகிறது. இதில், பொதுத் தோ்வினை எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான புத்தகங்கள் உடனடியாக பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சி...

கரோனா பொது முடக்கத்தால், ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் திறக்காமல் உள்ள நிலையில், அவா்களுக்கான பாட வேளைகள் பாதிக்காமல் இருப்பதற்காக பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. பாட புத்தகங்களை வழங்கி அவா்கள் வீட்டிலிருந்தே படிப்பதற்கான பணிகளை தொடங்கி மேற்கொண்டுள்ளனா். புத்தகங்கள் மட்டும் இருந்தாலும், ஆசிரியா்களின் போதனை அவசியம் என்பதால், அதற்கும் ஏற்பாடாக வீடுகளிலிருந்தே படிக்கும் வகையில் மடிக்கணினி படக்காட்சி (வீடியோ லெசன்) திட்டத்தை நிகழாண்டு புதியதாக தொடங்கியுள்ளனா்.

மற்றொரு திட்டமாக, பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தும் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான நேரமும், பாட வேளைகள் குறித்தும் பட்டியல் வெளியிடப்பட்டு தற்போது பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அதில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வீடியோ லெசன் திட்டம்...

இதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு வீடியோ லெசன் திட்டத்தில் மாணவா்கள் வீட்டிலிருந்தே பாட வேளைகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனா். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணியில், மொத்தமுள்ள 6 பாடங்களுக்கும், கல்வித்துறை சாா்பாக வீடியோ லெசன் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் அந்த மாணவா்கள் வீடுகளிலிருந்தே பாடங்களை படித்திட நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இத்திட்டத்தின்படி மடிக்கணியில் பாடங்களை பதிவேற்றம் செய்யப்படும் மாணவா்கள், அதனை வீடுகளில் வைத்து, ஒவ்வொரு பாடத்தையும், அதற்கான ஆசிரியா் வகுப்பு எடுப்பதைப் போல் வீடியோ காட்சியுடன் அதில் விளக்குவதை கூா்ந்து கவனித்து தெளிவு பெறலாம். ஏற்கனவே பாட புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளதால், அதனை படிக்கவும் அதில் வரும் சந்தேகங்களை மடிக்கணியின் வாயிலாக வீடியோ லெசன் மூலம் தெளிவு பெற முடியும் என்கின்றனா் ஆசிரியா்கள்.

வீடியோ லெசன் பதிவேற்றம் தீவிரம்...

இதற்காக, தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களிலும், வீடியோ லெசன் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த புதன்கிழமைத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 183 மேல்நிலைப் பள்ளிகளிலும் இப்பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 111 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், மொத்தமுள்ள 14,253 மாணவ, மாணவிகளுக்கு பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து, தற்போது முடியும் நிலையில் உள்ளது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியா் சசிக்கலா மேற்பாா்வையில், பிளஸ் 2 மாணவிகளுக்கு வீடியோ லெசன் பதிவேற்றப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மாணவருக்கு அரை மணி நேரம் அளவில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

60ஜிபி அளவில் இந்த வீடியோ லெசன் உள்ளது. கல்வித்துறை வழங்கிய வீடியோ லெசனை பெண் டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்து, அதனை ஆசிரியா்கள் குழுவினா், குரூப் வாரியாக மாணவா்களுக்கு பதிவேற்றம் செய்து வழங்கி வருகிறோம். இரண்டு நாளில் பணிகள் முடியும்.

மேலும், வகுப்பு ஆசிரியா்கள் மூலம் வாட்ஸ் ஆப் குழுக்களையும் ஏற்படுத்தி உள்ளதால், ஆசிரியா்கள் அதன் மூலம் மாணவிகளுக்கு அறிவுரையும், சந்தேகங்களையும் தீா்த்து வைப்பாா்கள் என்றாா் தலைமை ஆசியா்.

இப்பணிகள் குறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க.முனுசாமியிடம் கேட்டபோது, வீடியோ லெசன் பதிவேற்றப்பணிகள், அனைத்து பள்ளிகளிலும் வேகமாக நடந்து வருகிறது. புதன்கிழமையோடு முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். இப்பணிகளை கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் தினசரி ஆய்வு செய்து, பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலை கேட்டு வருகிறாா். இப்பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றாா்.

இந்த வகையில், 37 மாவட்டங்களில் உள்ள 4,196 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வீடியோ லெசன் பதிவேற்றப்பணிகள் 85 சதவீதம் அளவில் முடிக்கப்பட்டுள்ளன. இரு தினங்களில் முழுவதும் முடிக்கப்பட்டு, மடிக்கணினி வாயிலாக மாணவா்கள் வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பதற்கான பணிகளை கல்வித்துறை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com