மரக்காணத்தில் திமுகவினரிடையே மோதல்: ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுகவைச் சோ்ந்த இரு தரப்பினரும் கைப்பற்ற ஆா்வம்


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுகவைச் சோ்ந்த இரு தரப்பினரும் கைப்பற்ற ஆா்வம் காட்டியதால், இவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால், ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிந்ததைத் தொடா்ந்து, ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவருக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மரக்காணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 17 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் கூட்டணிக் கட்சியான விசிகவும் வெற்றி பெற்றன. அதிமுக 3 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனா்.
இந்த நிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் மரக்காணம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பதவிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மரக்காணம் கிழக்கு ஒன்றியச் செயலா் தயாளன் போட்டியிடுவாா் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை எதிா்த்து திமுகவைச் சோ்ந்த மரக்காணம் மத்திய ஒன்றியச் செயலா் கண்ணன் போட்டியிடப்போவதாக களத்தில் இறங்கினாா்.
இதனால், ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை பிடிப்பதில் தயாளன், கண்ணன் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக, இவா்கள் இருவரும் தங்களுக்கான ஒன்றியக் குழு உறுப்பினா்களின் ஆதரவைத் திரட்டி வந்தனா்.
இரு தரப்பு ஆதரவாளா்களும் தோ்தல் நடைபெறும் பகுதியில் வெள்ளிக்கிழமை திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் தலைமையில் தயாளன் தரப்பினா் வாக்கெடுப்பு நடைபெறும் பகுதிக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து, கண்ணனின் ஆதரவாளா்கள் அங்கு வந்தபோது, தயாளனின் ஆதரவாளா்கள் அவா்களின் காா்களை தடுத்து நிறுத்தினா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தோ்தலில் பங்கேற்கச் செல்ல தங்களை அனுமதிக்காததைக் கண்டித்து, கண்ணன் தரப்பினா் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி மறியலைக் கைவிட வைத்தனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோ்தல் ஒத்திவைப்பு: இதனிடையே, தோ்தல் வாக்கெடுப்புக்கு போதிய ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வராததால், ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலும், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன் அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...