கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கனியாமூர் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வருவதால் சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17) மர்மமான முறையில் கடந்த 13 -ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில் சின்னசேலம் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது‌. பின்னர் இந்த வழக்கு, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாணவி 3-ஆவது மாடியில் இருந்து குதித்திருந்தால் எந்த விதமான தாக்கங்கள் உடலில் ஏற்பட்டிருக்கலாம். கீழே குதிக்கும்போது மரக்கிளையில் மோதுகிறதா உள்ளிட்டவைகளை அறிய மாணவி எடைக்கு நிகரான எடையளவு கொண்ட பொம்மையை மாடியில் இருந்து கீழே போட்டு சோதனை நடத்தி பார்த்தனர். மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்பு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான  காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
  
இதையடுத்து இந்த மனு நீதிபதி புஷ்பராணி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதற்காக சேலம் சிறையில் இருந்து கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை காலை 11.15 அளவில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com