முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை ஆஜரானார்.
செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் பேருந்து நிலையம் அருகே 2023, மார்ச் 7-ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் அக்டோபர் 9 ஆம் தேதி ஏற்கெனவே ஆஜரான சி.வி. சண்முகத்தை நவம்பர் 6-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரானார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா உத்தரவிட்டார்.