புயல் நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுச்சேரி சாரத்தில் உள்ள ஜீவானந்தம் சிலை அருகே மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணியை தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரகம் எதிரே நிறைவு செய்தனா்.
முன்னதாக, பேரணியை கட்சியின் மூத்தத் தலைவா் முருகன் தொடங்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், புதுவை மாநில அரசு கோரிய ரூ.614 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதற்கட்ட நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், சத்தியா, சுதா சுந்தரராமன், ஜோதிபாசு, ராம்ஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

