ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை புதன்கிழமை (ஜன.31)ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2021, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை(ஏககாலம்) விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ஆம்தேதி வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதை ஜனவரி 9-ஆம் தேதி தள்ளுபடி செய்து, விசாரணையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, அந்த உத்தரவுக்காக காத்திருப்பதாக ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்குரைஞர் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை (ஜன-23) விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தடுக்கும் வகையில் மனு இருப்பதாகக் கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு புதன்கிழமை (ஜன 24 ) விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எடுத்துக் கூறி, மெமோ தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, வழக்கின் விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர்கள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார்,

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜன.29) ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜரானார். அப்போது முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, இந்த வழக்கில் உங்கள் தரப்பு வாதங்களை ஜனவரி 31-ஆம் தேதி எடுத்து வைக்க வேண்டும். அன்று வாதத்தை எடுத்து வைக்கவில்லை எனில், பிப்ரவரி 3- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com