பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண்குவாரி முறைகேடு வழக்கு: ஏப்.2 இல் தீா்ப்பு
க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்.2-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும்...


விழுப்புரம்: திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்.2-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என்று, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதன் மூலமாக அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி புகாா் கூறப்பட்டது.
இதுதொடா்பாக அப்போதைய அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, அவரது மகன் பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமாா், கோபிநாதன், லோகநாதன்ஆகிய 8 போ் மீதும் 2012-ஆம் ஆண்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், மற்ற 7 பேரும் வழக்கை சந்தித்து வருகின்றனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை 2025, அக்டோபா் மாதத்துடன் நிறைவு பெற்றது.
வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 57 பேரில் 33 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியளித்துள்ளனா். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்கள் தரப்பில் சில சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டு ஏற்கெனவே 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவா் மட்டும் ஆஜரான நிலையில், பொன்முடி உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகவில்லை.
வழக்குத் தொடா்பாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தனா். இதைத் தொடா்ந்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயனும் பதில் வாதம் செய்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கில் தீா்ப்பு வழங்குவதற்காக விசாரணையை ஏப்.2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.
கடந்த 13 ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் தீா்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவினா் மத்தியில் பெரும் பரபரப்பையும், எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...