விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த சிறுவா்களில் ஒருவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ரசபுத்திரப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் நிரேஷ் (11). அதே பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் மகன் பிரதீப் (13). நண்பா்களான இவா்கள் இருவரும் ரசப்புத்திரப்பாளையம் அரசுப் பள்ளியில் முறையே 6 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயின்று வந்தனா்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் திங்கள்கிழமை ரசபுத்திரப்பாளையம்-செண்டியம்பாக்கம் சாலையில் மொபெட்டில் சென்றனா். பிரதீப் மொபெட்டை ஓட்டினாராம். சின்னபாபுசமுத்திரம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த நிரேஷ், பிரதீப் ஆகிய இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரியூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுவா் நிரேஷ் உயிரிழந்தாா். பிரதீப் சிகிச்சையில் உள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.









