மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மேஷம்

மேஷ ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்?

News image

மேஷ ராசி

Updated On :10 ஏப்ரல் 2026, 6:23 am

கிரகநிலை

ராசியில் சூர்யன், சுக்கிரன் - தைரிய வீரிய  ஸ்தானத்தில் குரு - பஞ்சம  ஸ்தானத்தில் கேது - லாப  ஸ்தானத்தில் சந்திரன், ராகு அயன சயன போக  ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி -  என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்

27-06-2026 அன்று குரு பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-10-2026 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று ராகு பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று கேது பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகள் மறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

நெடுநாள்களாக வாட்டி வதைத்துக்கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும் முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள்.  மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.

செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை சிரமப்பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும்  பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

உத்யோகஸ்தர்கள்

வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். 

வியாபாரிகள்

திருப்தியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

விவசாயிகள்

விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக்கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும். 

அரசியல்வாதிகள்

கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள்.  பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள். 

கலைத்துறையினர்

செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள்.  சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். 

பெண்மணிகள்

கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும். 

மாணவமணிகள்

புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள்.  நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். 

அஸ்வினி

தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். 

பரணி

சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 

கார்த்திகை - 1

புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். 

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்

’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மலர் பரிகாரம்

“செவ்வரளி” மலரை ஏதேனும் கோவிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்

வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி