நான் கடந்த ஆறு ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு வருகிறேன். தடங்கல் ஏற்பட்டு வருகிறது. எப்பொழுது திருமணம் நடைபெறும்? தாய் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ விரும்புகிறேன்; நடக்குமா?
-வாசகர், திருச்செங்கோடு.
உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று பாக்கிய, அயன ஸ்தானாதிபதியான புத பகவானுடன் இணைந்து மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார்கள்.
சுகம், பஞ்சமம் ஆகிய கேந்திர திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி ராஜயோக காரகரான சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அவருடன் மூன்று மற்றும் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானும் (ஏகாதச பிரகஸ்பதி) ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார்.
பொதுவாக சனிபகவானுடன் குரு பகவான் இணைந்திருப்பது சிறப்பான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்றும், ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு காலபுருஷ தத்துவப்படி பார்க்கையில் இது "தர்ம கர்மாதிபதி யோகம்' ஆகும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் கர்ம ஸ்தானத்தில் நீச்சம் பெற்று, நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெறுவதாலும், கடக ராசிக்கு அதிபதி உச்சம் பெறுவதாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். லாபாதிபதி சூரிய பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் குரு மஹா தசையில் சனி மஹா புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்கும் புத பகவானின் புக்தியில், அதாவது இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் தடைகள் விலகி, களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.
பிரதி வியாழக்கிழமைகளில் ஒருபொழுதாவது விரதமிருந்து குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். சூரிய, சந்திர பகவான்களும், சுக பாக்கியாதிபதிகளும் வலுவாக இருப்பதால் இறுதிவரை பெற்றோருக்கு ஆதரவாகவே இருப்பீர்கள்.