லாபாதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் குரு (குரு சந்திர யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தன் மூலத்திரிகோண வீடான தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
பாக்கிய ஸ்தானத்தில் குரு சந்திர யோகமும், பாக்கியாதிபதி வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) நீச்ச பங்க ராஜயோகமும் பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் உயரிய நிலையை அடைந்து விடுவார்.
களத்திர நட்பு ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார்.
தற்சமயம் சனி மஹா தசையில் லக்னாதிபதியான சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால், இன்னும் ஓராண்டுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.