

டாக்டர் சுதா சேஷய்யன்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர்.
சிறு வயதிலேயே என் பெற்றோர் எனக்கு படிப்பு ஆர்வத்தை வளர்த்தனர். அதனால், வாசிக்கத் தெரியாத வயதிலேயே அப்பாவின் புத்தகங்களை அடுக்கிவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரின் திருவாசகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது கதையை அப்பா எனக்குக் கூறியுள்ளார்.
வீடென்றில்லை, பணிபுரியும் இடங்களில்கூட புத்தகங்களைச் சேகரித்து வைத்து நூலகமாக்கிப் படிக்கும் பழக்கமுண்டு. அப்பா முதல்முதலாக மெரியம் வெப்ஸ்டர் ஆங்கில அகராதியை வாங்கித் தந்தார். தற்போது தமிழ், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றின் அகராதிகளைப் படித்து வருகிறேன். மொழியையும், சொற்களையும் முறையாக, தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அந்த வாசிப்பு உதவும்.
கம்ப ராமாயணம் எனக்குப் பிடித்த நூலாகும். கம்ப காவியத்தைப் படிக்கப் படிக்க புதிய புதிய கருத்துகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். திருநாவுக்கரசரின் தேவாரம் மிகவும் பிடிக்கும். பணிவையும், அன்பையும் உணர வைக்கிற பாடல்களாக அவை உள்ளன.
அரவிந்தரின் "சாவித்ரி' நூலானது வேத நெறிக்கும், நவீனத்துவத்துக்கும் பாலமாக இருப்பதைப் படித்தால் உணர முடியும். ஆங்கிலத்தில் ராபின் குக் மற்றும் டான் ப்ரெளன் நாவல்களை விரும்பிப் படிப்பேன்.
இந்திய விடுதலைப் போராட்டங்கள் குறித்த நூல்களையும் தேடிப் படிப்பேன். அக்காலகட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களது செயல்பாடுகள், கள நிலவரத்தை அறியும் வகையில் உள்ள நூல்களாக அவை இருக்கும்.
மருத்துவர் என்பதால், மருத்துவத் துறையின் வரலாறு, புதிய முன்னேற்றம் மற்றும் மன நலன் குறித்த நூல்கள் ஆகியவற்றையும் படிப்பதுடன், பொதுவான நூல்களையும் படிப்பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.